வாங்க.. வாங்க.. வணக்கம். தங்கள் வரவு நல்வரவாகுக. வந்ததும் வந்தீங்க, ஏதாவது சொல்லிட்டு போங்க !

3 மார்., 2016

அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்


தழும்பு என்ற ஒன்று இருக்குமானால் அது உருவானதற்கான காரணம் நிச்சயம் இருக்கும்.
ஏதாவது ஒரு வகையில் ஒவ்வொருவர் உடலிலும் எங்காவது ஓர் இடத்தில் தழும்பு இருக்க வாய்ப்புண்டு. ஒருவேளை உடலில் இல்லாவிட்டாலும் மனதில் உண்டான காயங்களினாலான தழும்புகள் இருக்கும். அவற்றை பார்க்கும்போது அது உருவானதற்கான காரணம் நினைவில் வந்துபோகும்.
போரில் உண்டான காயத்தின் தழும்பு ஒரு வீரனுக்கு மகிழ்ச்சியையும் பெருமிதத்தையும் தரும்.
விபத்துகளினால் உண்டான காயத்தின் தழும்போ அந்த சம்பவத்தை நினைக்கும்போதே அதிர்ச்சியை தரும்.
அடுத்தவர் வாழ்வை கெடுத்து தங்களை வளப்படுத்தி கொள்வோர் எதிரிகளின் தாக்குதலில் அடையும் காயத்தினால் உண்டாகும் தழும்போ பழிக்குப் பழி வாங்கும் உணர்வை கொப்பளிக்கும்.
எதிர்பாராத வகையில் அடைந்த காயங்களினால் உண்டான ஒவ்வொருவரின் தழும்புகளும் இதுபோன்ற பல்வேறு உணர்வுகளை தரும்.
ஆனால் ஒரே ஒருவர் மட்டும் தானே விரும்பி தன்னுடைய உடலில் காயங்களுக்கு இடமளித்து மரணத்தையும் சந்தித்து உயிருடன் எழுந்து பரலோகம் சென்றார் என்றால் வரலாற்றில் அவருக்கு நிகர் யாருமில்லை.
தேவாதி தேவனாம் கர்த்தராகிய இயேசுதான் அவர். அவரின் தழும்புகளால் குணமானீர்கள் (1 பேதுரு 2:24) என்று வேதம் சொல்கிறது.
உலக மாந்தர் ஒவ்வொருவரின் பாவத்தையும் சாபத்தையும் அவற்றிற்குண்டான தண்டனையையும் தன் மீது ஏற்று கொண்டவர் அவர்.
சிரசில் முள்முடி தாங்கி
உடலெங்கும் சாட்டையடியால் கிழிக்கப்பட்டு உழுத நிலம் போல கொடுமையாக சித்திரவதை செய்யப்பட்டு பாரமான சிலுவையை தோல்களில் சுமந்து கைகளிலும் கால்களிலும் கூரான ஆணிகளால் அடிக்கப்பட்டு கொடூர மரணத்தை சந்தித்த தேவன் அவர்.
நான் செய்த பாவத்திற்கான தண்டனையை நான் தான் அனுபவிக்க வேண்டும். அதுதான் சரி. ஆனால்
என் பாவங்களுக்காகவும் என் முன்னோரின் என் சந்ததியினரின் பாவங்களுக்காகவும்
அவற்றினால் வரும் சாபங்களுக்காகவும் ஏன் அவர் காயப்பட வேண்டும்?
என் மீது அவர் கொண்ட அளவிட முடியாத அன்புதான் காரணம்.
சிலுவை மரணத்தால் என் பாவம் பறந்து போனது. சாபம் கருவறுக்கப்பட்டது. என் வலிகள் எல்லாம் அவர் அனுபவித்து சுகத்தை எனக்கு அளித்தார். அவரின் தழும்புகளால் நானும் நீங்களும் குணமடைந்தோம் என்பதே முற்றிலும் உண்மை. அதைத்தான் வேதம் சொல்கிறது.
இன்றைய நமது வாழ்க்கையில் அந்த தியாகத்தை நினைத்து நன்றியோடு நாம் வாழ்கிறோமா என்பதை நினைத்து பார்ப்போம். ஒருவேளை நாம் தவறி நடப்போம் என்றால் மனம் வருந்தி சரியான வாழ்க்கைக்கு திரும்புவோம்