வாங்க.. வாங்க.. வணக்கம். தங்கள் வரவு நல்வரவாகுக. வந்ததும் வந்தீங்க, ஏதாவது சொல்லிட்டு போங்க !

24 டிச., 2014

நட்சத்திரம் சொன்ன நற்செய்தி



யூதேயா தேசத்தில் உள்ள பெத்லகேமில் உலகத்தின் மீட்பர் பிறந்தார் என்று அந்தரத்தில் தொங்கும் நட்சத்திரம் நற்செய்தி சொன்னது. சொன்னது மாத்திரமல்ல கிழக்கு தேசத்தில் இருந்து வந்த சாஸ்திரிகளுக்கு வழியும் காட்டியது.
வானத்து பறவைகளுக்கு கூடுகளுண்டு மனுமகனுக்கோ தலை சாய்க்க இடமில்லை.
அவள் தன் முதற்பேறான குமாரனை பெற்று, சத்திரத்திலே அவர்களுக்கு இடமில்லாதிருந்தபடியினால் பிள்ளையைத் துணிகளில் சுற்றி முன்னணையில் கிடத்தினாள். (லூக். 2:7)
அவர்கள் கிழக்கே கண்ட நட்சத்திரம், பிள்ளை இருந்த ஸ்தலத்திற்கு மேல் வந்து நிற்கும் வரை அவர்களுக்கு முன் சென்றது. அவர்கள் அந்த நட்சத்திரத்தை கண்டபோது மிகுந்த ஆனந்த சந்தோஷமடைந்தார்கள்.
அவர்கள் அந்த வீட்டிற்குள் பிரவேசித்து பிள்ளையையும், அதன் தாயாகிய மரியாளையும் கண்டு, சாஷ்டாங்கமாக விழுந்து பணிந்து கொண்டு தங்கள் பொக்கிஷங்களை திறந்து, பொன்னையும், தூப வர்க்கத்தையும், வெள்ளை போளத்தையும் அதற்குக் (அவருக்கு) காணிக்கையாக வைத்தார்கள். (மத்தேயு. 2: 9-11)
தூதனின் நற்செய்தி..
அவ்வேளையில் கர்த்தருடைய தூதன் அவர்களிடத்தில் வந்து நின்றான். கர்த்தருடைய மகிமை அவர்களை சுற்றிலும் பிரகாசித்தது. அவர்கள் மிகவும் பயந்தார்கள்.
இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்காக தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார். (லூக். 2: 9-11)
அனைத்தையும் படைத்த அகிலாண்ட நாயகன், அன்பின் ராஜா இயேசுவின் அதிசய பிறப்பு நிகழ்வுகள் இவை.
கீழ் தேசத்தில் இருந்து வந்த சாஸ்திரிகளுக்கு இந்நற்செய்தியை நட்சத்திரம் கூறியது என்றால் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த மேய்ப்பர்களுக்கோ தேவதூதன் அந்த நற்செய்தியை மிகுந்த சந்தோஷத்துடன் தெரிவித்தான். ஆடு மேய்ப்பவன் தானே என்று அற்பமாய் எண்ணாமல் அவர்களை நோக்கி தேவதூதன் இறங்கி வந்தான் என்றால் தேவன் மனிதன் மீது அதாவது நம்மீது கொண்ட அன்பு எத்தகையது என்று உணர்ந்து கொள்ளலாம்.
அளவிட முடியாத அன்பின் அடையாளம் அற்புத இயேசுவின் பிறப்பு.
பாவம், சாபம், வியாதிகளில் இருந்து எங்களை காப்பாற்ற யாராவது வரமாட்டார்களா என்று ஏங்கிய மக்களுக்கு மன்னனின் பிறப்பு மகிழ்ச்சியை தந்தது. சகலருக்கும் சந்தோஷத்தை கொடுத்தது.
விண்ணக மகிமையை துறந்து மண்ணகம் வந்த உன்னதர், மனிதனாய் மண்ணில் வந்தாலும் என் ராஜ்ஜியம் வேறு என்றுரைத்தவர்.
உறவுகள் உதறினாலும் ஒருபோதும் கை விடாதவர். உள்ளங்கையில் உன்னை வரைந்திருக்கிறேன் என்றவர். பாவி என்று எவரையும் வெறுக்காதவர். அவர்களியும் நேசித்து ரட்சிக்கவே வந்தேன் என்றவர். அதிகாரத்தோடே உன் பாவம் நீங்கிற்று என்று கூறி சமாதானம் அருளியவர்.
தீர்ப்பளிக்கும் அதிகாரம் தனக்கிருந்தாலும் யாரையும் தீர்ப்பிடாதவர். இனி பாவம் செய்யாதே என்று சம்பந்தப்பட்டவருக்கு அறிவுரை கூறி அவர்களை உணர வைத்து அழ வைத்தவர்.
தொட்டு சுகமாக்கியவர். வார்த்தையால் பலருக்கு சுகம் தந்தவர். இறந்து போனவர்களையும் உயிரோடு எழுப்பியவர், மனதுருகி பலருக்காக கண்ணீர் விட்டவர். எப்படி வாழ வேண்டும் என்று வாழ்ந்து காட்டியவர். மனித வாழ்க்கைக்கு தேவையான மகத்தான கட்டளைகளையும், கற்பனைகளையும் சத்திய வேதமாக (பைபிள்) தந்தவர். எத்தனையோ பேரின் வாழ்க்கையை புரட்டி போட்டவர்.
கீழ்படியாமையின் விளைவால் இந்த உலகத்தில் பாவம் வந்தது. அதனால் சாபமும்- மரணமும் வந்தது. இவற்றின் காரணமாய் மக்கள் படும் வேதனை அறிந்து அவர்களை மீட்க கோர சிலுவையில் இரத்தம் சிந்தி மரிக்க வேண்டும் என்று தெரிந்தும் தந்தையின் சித்தத்திற்கு தன்னை ஒப்பு கொடுத்து கீழ்படிதலின் அவசியத்தை உணர்த்தியவர்.
சிலுவையில் ஆணியால் அடிக்கப்பட்டு தொங்கி கொண்டிருந்த வேளையிலும் தன்னை துன்புறுத்தியவர்களை மன்னிக்கும்படி பிதாவிடம் வேண்டி கொண்டவர். மேலும் தன் அருகே இருந்த கள்வனையும் ஈர்த்து, இன்றே நீ என்னோடு பரதீசில் இருப்பாய் என்று கூறி தன் அன்பை வெளிப்படுத்தியவர்.
எல்லாவற்றிற்கும் மேலாக, மரணமே உன் கூர் எங்கே? பாதாளமே உன் ஜெயமிங்கே? என்று மரணத்தை வென்று மீண்டும் உயிரோடு எழுந்தவர். உலகம் முடிவு மட்டும் சதா காலங்களிலும் உங்களுடனே கூட இருப்பேன் என்று வாக்கு கொடுத்தவர். அதன்படி இன்றும் பரிசுத்த ஆவியானவர் வடிவில் உயிரோடிருப்பவர்.

அவரின் பிறப்பை கொண்டாடும் நமக்கு அவரின் வாழ்க்கை ஒரு பாடம். அதன்படி வாழ்ந்தால் அவரின் பிள்ளைகள் என்ற தகுதி பெறுவோம். அனைத்தையும் சுதந்தரித்து உலகை ஜெயிப்போம்.
அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்….




6 செப்., 2014

தியாக நாய்

அனாதையான குட்டிகள்
குலவிளக்கு என்ற பழைய தமிழ்த் திரைப்படத்தில் ஒரு காட்சி. காசநோயால் பாதிக்கப்பட்ட கதாநாயகி, பழைய பொருட்களை போட்டு வைக்கும் இடத்தில் தூக்கி வீசப்பட்டிருப்பாள். மரணம் நெருங்குகிறது. அவள் பாசமாக வளர்த்த நாய் இதை அறிந்து கொள்கிறது. தன் வாயில் ஒரு சிறிய பாத்திரத்தை தூக்கிக் கொண்டு தண்ணீர் எடுத்து வந்து அவள் அருகில் வைக்கிறது. எப்படியாவது அவள் உயிரை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில், அதற்குள் அவள் இறந்து விடுகிறாள். நன்றி பெருக்கால் அந்த நாய் இதை செய்கிறது. அந்த காட்சியை நான் கண்டபோது கண்ணீர் வடித்தேன்.

நன்றி கெட்ட மகனை விட நாய்கள் மேலடா? என்றொரு பாடலை நாம் கேட்டிருப்போம். பெற்று வளர்த்த பிள்ளைகள்கூட நன்றி கெட்டவர்களாக மாறி விடுவார்கள், ஆனால் எப்போதும் நன்றி மறக்காத நாய்கள் அவர்களை விட மேலானவை என்ற அர்த்தம் அந்த பாட்டில் சொல்லப்பட்டிருக்கும்.

இப்படி நன்றி என்ற சொல்லுக்கு உதாரணமாக காட்டப்படும் ஒரே ஜீவனான நாய் ஒன்று தனக்கு தியாக உணர்வும் இருக்கிறது என்பதை காட்டியிருக்கிறது.

தினகரன் நாளேட்டில் (05.09.2014) அந்த செய்தியை படித்தேன். மனம் கலங்கி போனேன். கண்களின் ஓரம் கண்ணீர் வழிந்தது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கும் பழைய மூர் மார்க்கெட் இருந்த இடத்திற்கும் (இன்று அல்லிகுளம் வளாகம்) இடையில் இரண்டு நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் நீர் தேங்கி இருந்துள்ளது. அந்த பகுதியில் இருந்த விளக்கு கம்பத்தில் மின்கசிந்ததால் மழை நீரிலும் மின்சாரம் பாய்ந்திருந்தது. யாருக்கும் இது தெரியவில்லை. 

இரவு 10 மணியளவில் ரயிலை பிடிக்கும் அவசரத்தில், மழைநீரில் கால் வைக்க  வந்த பயணிகளை அங்கிருந்த நாய் ஒன்று விரட்டியது. நாயின்  சீற்றத்தை பார்த்த பயணிகள் பயந்துபோய், மழைநீர் இருந்த பக்கம்  வராமல் சுற்றியபடி சென்றனர். தனியாகவும், கூட்டமாகவும் வந்த  10-க்கும் மேற்பட்டவர்களை அந்த நாய் விரட்டியபடியே  இருந்தது. சிலர் பயத்தில் நாய் மீது கல் எறிந்தனர். இரண்டு நாட்களுக்கு முன்புதான் அந்த நாய் 7 குட்டிகளை போட்டிருந்தது. குட்டிகள் இன்னும் நடமாட ஆரம்பிக்கவில்லை.

அந்த வழியாக சென்ற இளைஞர் ஒருவர், நாய்  குரைப்பதையும், தன்னை விரட்ட முயல்வதையும் கண்டுகொள்ளாமல் மழைநீர் தேங்கிய பகுதிக்கு அருகே சென்று  விட்டார். அவரை நோக்கி நாய்  குரைத்துக்கொண்டே இருந்தது. தன் வேகத்தை  குறைத்து நின்று, நாயை விரட்ட அவர் கல் தேடினார். சற்றுநேரத்தில் குரைப்பதை நிறுத்திய அந்த நாய், வேகமாக ஓடிவர ஆரம்பித்தது.  தன்னை நோக்கி ஓடிவந்த நாயை அந்த இளைஞர், பார்த்துக் கொண்டே  இருந்தார். அதற்குள் அந்த நாய், மின்கசிவு  ஏற்பட்டிருந்த மழைநீரில் வேகமாக பாய்ந்தது. அதில் இருந்த மின்சாரம் பாய்ந்து, நாய் துடிதுடித்து இறந்தது. இளைஞர் அதிர்ச்சியில் உறைந்தார். மேலும், அந்த வழியாக வந்த பொதுமக்கள் சிலரும் அப்படியே சிலையாக நின்றனர். மழைநீரில் மின்சாரம் பாய்ந்த விஷயம், அந்த நாய் இறந்தது  மூலம்தான் தெரிய வந்தது.

உடனடியாக மாநகராட்சிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஊழியர்கள் வந்து  மின்சாரத்தை துண்டித்து அந்த இடத்தை சரி செய்தனர். மழை நீரில் இறந்து கிடந்த நாய் மீட்கப்பட்டு, நடைமேடையில் கிடத்தப்பட்டது.  பயணிகளையும், நடை பாதையில் கடை வைத்திருப்பவர்களையும்  காப்பாற்றிய நாய்க்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. தாயை இழந்து தவித்த 7 நாய்க்குட்டிகளும் மீட்கப்பட்டு புளுகிராஸ் அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டது.

பாச உணர்வு, நன்றி உணர்வு கொண்ட வீட்டு விலங்கான நாயின் இந்த செயலால் தனக்கு தியாக உணர்வும் இருக்கு என்பதை மனிதர்களுக்கு உணர்த்தி விட்ட்து.

இனிமேல் யாரையாவது, போடா நாயே என்று சொல்வதற்கு முன் அவரிடம் இத்தகைய பண்புகள் இருக்குமா? என்பது குறித்து யோசிக்க வேண்டுமோ என்னவோ?



5 மே, 2014

கடவுளின் குமாரன்

Son of God
நீண்ட நாட்களுக்குப் பின் நேற்று தியேட்டருக்குச் சென்று படம் பார்த்தேன். எந்தவித இடையூறுகளும் இல்லாமல் அமைதியாக இப்படி ஒரு படத்தை என் வாழ்க்கையில் நான் பார்த்ததே இல்லை.

படத்தில் உணர்ச்சிகளை தட்டி எழுப்பும் சீண்டல், முட்டல், மோதல், காதல், விரசமான பாடல் காட்சிகள் எதுவும் இல்லாததால் விசில் சத்தம் இல்லை. கைத்தட்டல்கள் இல்லை. வித்தியாசமான கமெண்ட்கள் இல்லை. படத்தின் இடையில் எழுந்து போவதும் இல்லாமல் படம் பார்க்க முடிந்தது.
எனக்கு இது ஆச்சர்யமாக இருந்தது.

அண்மையில் தமிழிலும், ஆங்கிலத்திலும் வெளிடப்பட்ட இயேசு படத்தைதான் பார்த்தேன்.

ஞாயிற்றுக்கிழமை என்பதால் படம் பார்க்க வந்தவர்களின் எண்ணிக்கை கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. அவர்களில் அநேகர் கிறித்தவர்களாக இருப்பார்கள் என்றே எனக்கு தோன்றியது.

கிறித்துவை அணிந்தவன் என்ற முறையில் அந்த படத்தை பார்த்தேன். ஏற்கெனவே பரிசுத்த வேதத்தில் அடிக்கடி படித்து ருசித்தவைதான், என்றாலும் அவற்றை எப்படி விஷுவலாக கொண்டு வந்து நம் கண் முன் நிறுத்தியிருக்கிறார்கள் என்பதை அறிய வேண்டும் என்று ஆவலாக படம் பார்த்தேன்.

இயேசுவின் வாழ்க்கை வரலாறு குறித்த எத்தனையோ படங்கள் வந்து அவற்றை பார்த்திருக்கிறேன். இந்த படத்தில் இயேசுவின் சீடர் இயேசுவை குறித்து சொல்வதை போல் படம் தொடங்கி அவரின் முடிவு வரை படத்தில் வித்தியாசமாகவே காட்டப்பட்டிருந்தது குறிப்பிடத்தகக்து.

இயேசுவின் பிறப்பு, அவர் இந்த பூமிக்கு எந்த நோக்கத்திற்கு அனுப்பப்பட்டார், மக்களை கடவுளுக்கு நேராக திருப்ப அவர் ஆற்றிய அருளுரைகள், அதற்காக அவர் மேற்கொண்ட பணிகள், அவற்றின் மூலம் அவரிடம் இருந்து வெளிப்பட்ட அற்புதங்கள், அதிசயங்கள், இவற்றையெல்லாம் செய்ததற்காக அவர் அனுபவித்தப் பாடுகள், முடிவில் அவர் சந்தித்த மரணம், மரணத்திற்கு பின் அவர் தேவனின் குமாரன் - தெய்வத்தன்மை கொண்டவர் என்பதை வெளிப்படுத்த உயிருடன் எழுந்தது,  இவை எல்லாம் படத்தில் விஷுவலாக காட்சிப்படுத்தப்பட்டது.
அருகில் இருந்து பார்த்ததைப் போன்ற உணர்வு படம் முடிந்து வெளியே வரும்போது எனக்கு ஏற்பட்டது.

இன்னும் விரிவாக சொல்லியிருக்கலாமோ என்ற ஆதங்கமும் எனக்கு வெளிப்பட்டது.

வாய்ப்பு கிடைத்தால் நீங்களும் இந்தப் படத்தை பாருங்கள்.