வாங்க.. வாங்க.. வணக்கம். தங்கள் வரவு நல்வரவாகுக. வந்ததும் வந்தீங்க, ஏதாவது சொல்லிட்டு போங்க !

21 செப்., 2012

அழியா கலை... அழிவை நோக்கி?


சித்திரம் என்பது ஓவியத்தைக் குறிக்கும் மற்றொரு சொல்லாகும். ஓவியம் ஓர் கலை. அந்த கலையை ஆத்மார்த்தமாய் ரசிப்பது ஓர் சுகம். அந்த சுகத்தை அனுபவித்தவர்களுக்கு மட்டும்தான் அதன் மேன்மை புரியும்.
மேலும், கீழும் கோடுகள் போடு அதுதான் ஓவியம் என்றார்கள். ஆமாம், ஓவியத்தின் மீது ஆர்வம் உள்ளவர்கள் முதல்ல இதைத்தான் செய்வார்கள். பல ஓவிய மேதைகள் இப்படித்தான் தரையிலும், சுவரிலும், காகிதங்களிலும் கிறுக்கி கிறுக்கியே அந்த கலையை கற்று சாதனைப் படைத்திருக்கின்றனர்.

பல நூற்றாண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்த இந்த கலை குறித்த ஆர்வம், சிறு வயதில் நான் படிக்கும்போது எனக்கு ஏற்பட்டது. எனது ஆர்வத்தை நான் வளர்த்துக் கொள்ள முக்கிய காரணமாக இருந்தவர் என் அப்பா. வீட்டில் ஓய்ந்திருக்கும் நேரத்தில் ஒரு நோட்டு புத்தகத்தை எடுத்து, அதில் ஏதாவது ஒரு உருவத்தை வரைந்து கொண்டிருப்பார். சில நேரங்களில் வரைந்த அந்த ஓவியத்திற்கு அட்டையிலோ, தகரத்திலோ உருவம் கொடுப்பார். வயது முதிர்ந்த நிலையில் இப்போதும் கூட அதை தொடர்ந்துக் கொண்டிருக்கிறார். அதில் ஒரு ஆன்ம திருப்தி அவருக்கு.

அடுத்து ஓவியத்தின் மீது எனக்குள்ள ஆசையை வெறியாக மாற்றியவர், என்னோடு படித்த நண்பரின் அண்ணன் டாக்டர் ஜீவராஜ் அவர்கள். சென்னை, காசிமேட்டில் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு நல்ல மனிதர். அவர் ஹோமியோபதி மருத்துவம் படித்துக் கொண்டிருந்த நேரம் அது. அவர்களுக்கு சொந்தமான விறகு கடையில் மாலை நேரங்களில் கல்லா பெட்டியில் அமர்ந்திருப்பார். வியாபாரத்தை கவனித்துக் கொண்டே ஓவியம் வரைவார். வெள்ளைத்தாளில் கட்டங்களைப் போட்டு சிறிய அளவில் இருக்கும் ஓவியத்தை என்லார்ஜ் செய்வார். கோடுகளில் உருவத்தை வரைந்து விடுவார். பின்னர் அதற்கு ஷேடிங் கொடுப்பார். அப்படி அவர் அழகாக வரைந்த கர்மவீரர் காமராஜரின் படம் ஒன்று இன்றும் என் மனதில் ஊஞ்சலாடிக் கொண்டிருக்கிறது.

அதன்பிறகு பத்திரிகைகள், சுவர் விளம்பரங்கள் என அந்த காலக்கட்டத்தில் வரைந்து கொண்டிருந்த பலரது ஓவியங்கள் என்னைக் கவர்ந்தன. விடுமுறை நாட்களில் பேப்பரும், பென்சிலும்தான் எனக்கு துணை. எதையாவது வரைந்து கொண்டிருப்பேன். படம் வரையும் ஆர்வம் அதிகரித்ததால் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் இருந்த ஒரு ஓவியப் பயிற்சி பள்ளியில் சேர்ந்து அஞ்சல் வழியில் ஓவியம் கற்றேன். டிப்ளமோவும் வாங்கினேன். இன்றும் அந்த பயிற்சி பள்ளி இயங்கி கொண்டிருக்கிறது என்று நினைக்கிறேன். 
இப்பவும் படம் வரைகிறாயா என்று மட்டும் கேட்காதீர்கள்.

அந்த வகையில் என்னைக் கவர்ந்த ஓவியர்கள் சிலர் இன்றும் நினைவில் இருக்கின்றனர். வடசென்னைப் பகுதியில் ராமன் ஆர்ட்ஸ், மகபூப் ஆர்ட்ஸ், ஜே.பி.கிருஷ்ணா ஆர்ட்ஸ் என பல ஓவிய நிறுவனங்கள் செயல்பட்டன. இந்நிறுவனத்தினர் சுவர்களில் படம் வரைவதில் கொடிகட்டி பறந்தனர். இவர்களின் சுவர் விளம்பரங்கள் நான் செல்லும் வழியில் எங்கேயாவது வரையப்பட்டால் மெய் மறந்து நின்று விடுவேன். பெரிய சுவர்களில் ஒருநாளில் முழு உருவமும் வரைய முடியாது. அதனால்  அந்த ஓவியம் முழுமை பெறும் நாள் வரை தொடர்ந்து அந்த பகுதிக்குச் சென்று பார்த்து வருவேன். முழுமையானதும் அதன் அழகை ரசித்து பார்ப்பேன். இவர்களின் கைவண்ணத்தில் அன்றைய சினிமா நட்சத்திரங்கள் அழகாகவே தெரிவார்கள். இவர்களை அடியொற்றி சிறு சிறு ஓவியர்களும் இந்த தொழிலில் ஈடுபட்டனர்.

அப்போதெல்லாம் சினிமா தியேட்டர்களின் வாசல்களில், திரையிடப்படும் படத்தின் காட்சிகளைக் கொண்ட மிகப்பெரிய பேனர்கள்தான் ஆதிக்கம் செலுத்தின. பேனரில் உள்ள அந்த படங்களை பார்த்துவிட்டு உள்ளே சென்று சினிமாவைப் பார்த்தால் வித்தியாசமே தெரியாது. அந்த அளவிற்கு கைகளால் வரையப்படும் ஓவியங்களுக்கு மவுசு இருந்தது.

ஓவியர்கள் மாருதி, ஜெயராஜ், மணியம் செல்வன், ஜமால், ட்ராஸ்கி மருது இவர்களின் படங்களுக்காகவே பல பத்திரிகைகளை வாங்குவேன். குறிப்பாக ஓவியர் மாருதியின் படம் என்றால் உயிர். அந்த படத்தை அப்படியே வரைய வேண்டும் என்று முயற்சி செய்வேன். கான மயிலாட கண்டிருந்த வான்கோழி கதையாகிவிடும். இருப்பினும் முயன்று கொண்டிருப்பேன்.



பெண்களின் உருவம், அவர்கள் அணிந்திருக்கும் ஆடைகள், ஆபரணங்கள் என ஒன்றையும் மிச்சம் வைக்காமல் அச்சுபிசகாமல் தத்துரூபமாய் வரையும் மாருதியின் ஓவியங்களும்,
மாடர்ன் டிரஸ் அணிந்த பெண்களின் உருவத்தை வரைந்து அவர்கள் அணிந்திருக்கும் டீ-சர்ட்டில் கவர்ச்சி வாசகங்கள் எழுதி அதன்பின் மறைந்திருக்கும் மார்பழகை வெளிப்படுத்தும் ஜெயராஜின் அந்த கோட்டு ஓவியங்களும் அப்பப்பா...



வரலாற்று பின்னணி கொண்ட அரசர்கள், அரசிகள், போர்க்களக் காட்சிகளை கோட்டோவியமாக வரைந்து அந்த வரலாற்றுக் காலக் கட்டத்திற்கே நம்மை அழைத்துச் செல்லும் மணியம் செல்வத்தின் ஓவியமும் அடடா... இப்போது நினைத்திலும் வியப்பாக இருக்கிறது.



இப்போது எங்கு பார்த்தாலும் கைகளால் வரையப்படும் ஓவியங்களைவிட கணினி மூலம் வரையப்படும் ஓவியங்கள்தான் நம் கண்களில் தென்படுகின்றன. கணினிமூலம் வடிவமைக்கப்படும் ஓவியங்களில் அன்றிருந்த அந்த தத்துரூபமும், உயிரும் இன்று காணாமல் போய்விட்டது. அதைபோலவே கைகளால் வரைந்து பிழைப்பு நடத்தி வந்த பலர் இன்று அந்த தொழிலை விட்டு வேறு தொழிலை செய்து வருகின்றனர். விரல் விட்டு எண்ணும் அளவிற்கு அங்கொன்றும், இங்கொன்றுமாக சில ஓவியர்கள் இன்றும் இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். பலர் காலத்திற்கேற்றபடி கணினி மூலம் படங்களை வரைந்து பிழைப்பு நடத்தி வருகின்றனர்.

காலத்தின் கட்டாயத்தில் சிறிது சிறிதாக மறைந்து கொண்டிருக்கிறது ஓவியக்கலை. பேப்பரும், பென்சிலும் கொண்டு கைகளால் வரைவது மறைந்துபோய் எலி வாலைப் பிடித்து இன்று கணினியில் படம் வரையப்படுகிறது. இன்றைய தலைமுறையினருக்கு கற்று தரப்படும் பயனில்லா விஷயங்களில் ஓவியக்கலையும் சேர்ந்துவிடுமோ என்றே நினைக்கத் தோன்றுகிறது.
மனதில் அமைதியும், சந்தோஷமும் தாண்டவமாடும் இனிய சூழலில் ஓவியம் வரைதல் ஓர் சுகம்.
இன்றைய காலக்கட்டத்தில் எங்கேங்க இப்படி ஒரு இனிய சூழலை அனுபவிக்க முடியுது? ஓவியம் வரையற மூடே வரமாட்டேங்குது... எப்படியாவது ஒரு ஓவியத்தை வரையணும், முயற்சி பண்றேன்.