வாங்க.. வாங்க.. வணக்கம். தங்கள் வரவு நல்வரவாகுக. வந்ததும் வந்தீங்க, ஏதாவது சொல்லிட்டு போங்க !

21 ஜூன், 2012

குரங்காட்டி


எனக்குள் அது அடக்கமா? அதற்குள் நான் அடக்கமா?
என் பேச்சை அது கேட்க வேண்டுமா?
அதன் பேச்சை நான் கேட்டு நடக்க வேண்டுமா?
இது மாதிரி பலமுறை நான் குழம்பி போய் இருக்கிறேன்.
அது எனக்கு அடங்கி இருக்க வேண்டும் என்று சில நேரங்களில் முடிவெடுத்து,
அதனுடன் சமரசம் பேசி அடக்க முயன்றிருக்கிறேன்.
அடங்குவதைப்போல நடித்து என்னை முழுவதுமாய் தன் வசப்படுத்தி கொள்ளும்.
அடக்கி ஆண்டவர்கள் சரித்திரத்தில் நிலைத்து நின்றிருக்கின்றனர்.
அடக்க முடியாதவர்கள் சரிந்து மறைந்து போயிருக்கிறார்கள்.
நம் மனதைப் பற்றிதான் இதுவரை கூறினேன்.
மனம் ஒரு குரங்கு என்றார்கள்.
பல நேரங்களில் அது உண்மை என நிரூபணமாயிருக்கிறது.
குரங்கை அடக்குபவன் குரங்காட்டி.
அப்படி பார்க்கப்போனால் நாமும் குரங்காட்டிதான்.
அண்மையில் திரு.சுகிசிவம் அவர்கள் எழுதிய மனிதனும் தெய்வமாகலாம் என்ற நூலில் ஒரு கதையைப் படித்து ரசித்தேன். அவருக்கு நன்றி...

இதோ அந்த கதை:
குரங்காட்டி ஒருவரின் வீட்டில் குரங்குதான் உணவு பரிமாறுவது வழக்கம். 
உணவை ஒவ்வொன்றாக அது பரிமாறும்போது குரங்காட்டி குச்சியால் அதற்கு ஓர் அடி கொடுப்பார்.
இத்தனைக்கும் அந்த குரங்கு எந்த தப்பும் செய்யாதபோதே அதற்கு இந்த தண்டனை..
சமர்த்தாக சாதம் வைத்ததும் ஓர் அடி..
சாம்பார் பரிமாறியதும் ஓர் அடி..
காய் வைத்ததும் ஓர் அடி..
குரங்கு சரியாக அடி வாங்கிச் சரியாக வேலை செய்தது.
ஒருமுறை குரங்காட்டியின் வீட்டிற்கு ஒரு விருந்தாளி வந்திருந்தார்.
குரங்கை அடிப்பது அவருக்கு பிடிக்கவில்லை.
தவறு செய்யாதபோதும் குரங்கை அடித்தால் நான் சாப்பிடமாட்டேன் என்று மறுத்து விட்டார்.
குரங்காட்டி அடிப்பதை நிறுத்தினார், இனி என்ன நடந்தாலும் நீங்கள்தான் பொறுப்பு என்று கூறிவிட்டு அமைதியானார்.
குரங்கு இலை போட்டது. அடி இல்லை. அதற்கு அதிர்ச்சி.
சாதம் வைத்தது. அப்போதும் அடி இல்லை.. மகிழ்ச்சி.
காய் வைத்தது... அடி இல்லை.
பல்லைக் காட்டி சிரித்தது குரங்கு. அடி இல்லை.
குழம்பு கொண்டு வரும்போதே அலட்சியமாக இளித்தது.
அடி இல்லை என்றதும் குழம்பிற்குள் கையை விட்டுக் கலக்கியது.
விருந்தாளி முகம் சுழித்து.. ச்சூ.. ச்சூ..என்று எரிச்சலுடன் விரட்டினார்.
குரங்கு அவர் மீது பாய்ந்து அவர் அணிந்திருந்த மூக்கு கண்ணாடியை பறித்து எறிந்தது. அத்துடன் அவர் தலையையும் பிராண்டியது.
ஐய்யோ காப்பாற்றுங்கள் என்று பரிதாபமாக அலறினார்.
குரங்காட்டி கோலை எடுத்தார். குரங்கு ஒடுங்கி விட்டது.
நமது மனமும் ஒரு பேய் குரங்கு. அதனால்தான் மகான்கள் அடிக்கடி அதனைக் கண்டித்து ஒடுக்கி உயர்ந்தார்கள்.
தவறு செய்தபின் தண்டிப்பதால் ஒரு பயனும் இல்லை.
செய்யாதபடி கண்டிப்பதும், ஒடுக்குவதும் தான் முக்கியம்.

கதை எனக்கு பிடிச்சிருக்கு. முயற்சி செய்து பார்க்கிறேன்.
உங்களுக்கு?