வாங்க.. வாங்க.. வணக்கம். தங்கள் வரவு நல்வரவாகுக. வந்ததும் வந்தீங்க, ஏதாவது சொல்லிட்டு போங்க !

2 ஜூன், 2012

பாவமும், சாபமும்




நாம் பார்க்கும், படிக்கும், கேட்கும் விஷயங்களை உள்வாங்கும் போது அவை எண்ணங்களாக மாறுகின்றன.
அந்த எண்ணங்களின் அடிப்படையில் கருத்துகளும், வார்த்தைகளும் உருவாகி, நம்முடைய நடத்தையில் வெளிப்படுத்தப்படுகின்றன.
வெளியாகும் செய்கைகளின்படி நடந்து முடிவில் வெற்றி, தோல்வியை அடைகிறோம்.

மொத்தத்தில் எண்ணங்கள் சீரானால் எல்லாம் சீராகும்
என்பது எனது அனுபவபூர்வமான நம்பிக்கை.

வழக்கம் போல் இன்று காலை தினத்தந்தி நாளேட்டை படித்தேன்.
பொதுவாக சில தலைப்புகளை படித்தாலே செய்திகளை படித்த உணர்வு வரும்.
ஒரு சில தலைப்புகள் கண்ணில் தென்பட்டதும் உள்ளே சென்று படிக்க தூண்டும்.
படிக்கும் போதே செய்தியை முழுமையாக உள் வாங்கவும் தோன்றும்.
குறிப்பிட்ட அந்த செய்தி சில நேரங்களில் நம் மனதையும் பாதித்து விடும்.

அந்த வகையில்,
விபத்தில் சிக்கி 2 ஆண்டுகளாக கோமா நிலையில் இருந்த மகனை
கொன்று ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை என்று வெளியாகி இருந்த செய்தி மனதை பாதித்தது.
இச்சம்பவம் மதுரையில் நடந்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.

ஓய்வுபெற்ற அந்த சப்-இன்ஸ்பெக்டர், தனது அன்பு மகனுக்கு திருமணம் செய்து வைத்திருக்கிறார்.
(தனது சந்ததி பெருக வேண்டும் என்று எவ்வளவு ஆசைப்பட்டிருப்பார்.)
5 ஆண்டுகளில் மகனின் திருமண வாழ்க்கையில் தோல்வி. (மனம் ஒடிந்து போயிருப்பார்).
இந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அதே மகன் விபத்தில் சிக்கி கோமா நிலைக்கு சென்றுள்ளார் (அந்த தந்தையால் எப்படிதான் தாங்க முடிந்ததோ?)
ரூ.10 லட்சம் வரை செலவு செய்தும் எந்த அசைவுமின்றி கிடந்த மகனின் நிலை கண்டு அவரது தாயும் நெஞ்சுவலியால் இறந்து போயுள்ளார்.
(மனைவியின் இறப்பும் அவரை வெகுவாக பாதித்திருக்கும்).
ஒரு நடைபிணமாக இருந்து மகனை கவனித்து வந்த அந்த சப்-இன்ஸ்பெக்டர் பொறுமையிழந்து மகனுக்கு விஷத்தைக் கொடுத்து
கருணைக்கொலை செய்து விட்டு, வீட்டிற்கு வெளியே இருந்த வேப்ப மரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டாராம்.

அடுத்த சந்ததிக்கு வாய்ப்பு இல்லாமல் இந்த தலைமுறையிலேயே ஒரு குடும்பம்
முழுவதும் அழிந்து போனதுதான் என் மனதை மிகவும் பாதித்தது.
இதுபோன்ற செய்திகளை கேள்விப்படும்போதும், படிக்கும்போதும்
என்ன பாவம் செய்தார்களோ என்றுதான் எல்லோரும் நினைப்பர்.
நானும் விதிவிலக்கல்ல.

அடுத்தவர்களை விமர்சனம் செய்யும் உரிமை எனக்கில்லை.
அது எனது நோக்கமும் அல்ல. அதிலும் இறந்தவர்களை விமர்சிப்பது அழகல்ல.
ஆனாலும் ஒரு முழு குடும்பமும் அழிந்து போனதே என்ற வருத்தம் நெஞ்சை விட்டு அகல மறுக்கிறது.

விஷம் கொடுத்து கொலை செய்யாமல் கோமா நிலையில் இருக்கும் மகனின் உடல் உறுப்புகளை
யாருக்காவது தானமாக கொடுத்திருக்கலாமோ என்றுகூட நினைக்கத் தோன்றுகிறது.
அப்படி செய்திருந்தால் பலரின் புண்ணியத்தையாவது அந்த குடும்பம் பெற்றிருக்கும்.

எங்கள் நிறுவன ஆசிரியர் திரு.யாணன் அவர்கள் எழுதிய பாவ புண்ணியக் கணக்குகள் நூலில் கூறியிருக்கும்
மனித வாழ்க்கையில் சம்பாதிக்க வேண்டியவை
புண்ணியங்களும், ஆசீர்வாதங்களும்,
சம்பாதிக்க கூடாதவை சாபமும், பாவமும்...

என்ற அந்த வாசகம் ஏனோ இந்த நேரத்தில் என் நினைவுக்கு வருகிறது.
நினைவில் இருந்து விரட்டப்பார்க்கிறேன், போக மறுக்கிறது.

வாழும்போதே முடிந்தவரை புண்ணியங்களையும்,
ஆசீர்வாதங்களையும் சம்பாதிப்போம்.
அது அடுத்த தலைமுறையையும் வாழ வைக்கும்.
.