வாங்க.. வாங்க.. வணக்கம். தங்கள் வரவு நல்வரவாகுக. வந்ததும் வந்தீங்க, ஏதாவது சொல்லிட்டு போங்க !

31 மே, 2012

விரக்தியும், வேதனையும்...




அண்மையில் பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டது.
வரலாறு காணாத அளவிற்கு ரூ.7.50 உயர்த்தப்பட்டதாக வாகனங்கள் வைத்திருக்கும் அனைவரும் கொந்தளிக்கின்றனர்.
நாடெங்கும் கண்டன குரல்கள் ஓங்கி ஒளிக்கின்றன.
அரசியல் கட்சிகளும் தங்கள் பங்குக்கு வரிசையாக ஆர்பாட்டங்கள் நடத்தின.
தேசிய அளவில் ஒரு சில கட்சிகள் இன்று (31.05.2012) பந்த் நடத்துவதாக அறிவித்திருந்தன.
பந்த் என்றாலே பஸ், ஆட்டோ ஓடுமோ என்று அச்சம் மக்களுக்கு உருவாகி விடும்.
இன்று காலை திருவல்லிக்கேணியில் உள்ள மருத்துவமனை ஒன்றிற்கு செல்ல வேண்டிய சூழல் உருவானது.
ஒரு ஆட்டோவில் சென்றோம். போகும்போது ஆட்டோ டிரைவரிடம் பந்த் குறித்து விசாரித்தேன்.
காலை 6 மணியிலிருந்து மாலை 6 மணி வரை பந்தாச்சே, வண்டி ஓட்றியப்பா, வழியில் எங்கேயாவது இறக்கி விட்ற போறப்பா என்றேன்.
இப்போ மணி 8 தான் சார், பத்து மணிக்கு மேல தான் ஒயின்ஷாப் திறக்கும். தண்ணி அடிச்ச பிறகுதான் பிரச்சனையே ஆரம்பிக்கும். அதுக்குள்ள போயிடலாம் என்றார்.
ஆக, இப்போ பெட்ரோல் விலை உயர்வு பிரச்சனை இல்லே, டாஸ்மாக் தண்ணிதான் என்று சிந்தித்து கொண்டே சென்றேன்.
மருத்துவமனைக்கு சென்றுவிட்டு மீண்டும் வேறொரு ஆட்டோவில் வந்தோம்.
ஏம்ப்பா பிரச்சனை எதுவும் இல்லையே, ஆட்டோ எல்லாம் ஓடுதா என்றேன்.
ஓடுது சார். அரசியல்வாதிகளுக்கு நடுத்தர மக்களை பற்றி கவலையெல்லாம் இல்லே.
இன்னைக்கு ஆட்டோ ஓட்டாமா போனா வண்டிக்கு எப்படி சார் வாடகை கட்றது?
அதுக்குமேல என் குடும்பம் பட்டினியா கெடக்கும்.
பெட்ரோல் விலை ஏறி போனதால் யாராவது வண்டி ஓட்டாம இருக்கிறாங்களா?
பங்க்ல பெட்ரோலே கிடைக்கல, அதிக விலை கொடுத்துதானே வாங்க முடிந்தது.
என்ன ஆர்பாட்டம் நடத்தினாலும் விலை குறைய போறதில்லை. என்ன செய்யறது,
எது வந்தாலும் சந்திச்சுதானே ஆகணும் என்று அவர் கூறும்போது விரக்தியும், வேதனையும் தெரிந்தது.
எந்த சூழ்நிலையையும் சந்திக்க மக்கள் தயாராகி விட்டனர்.
இந்த ஒன்றே அரசியவாதிகளுக்கு சாதகமாகி போய் விட்டது.