வாங்க.. வாங்க.. வணக்கம். தங்கள் வரவு நல்வரவாகுக. வந்ததும் வந்தீங்க, ஏதாவது சொல்லிட்டு போங்க !

19 ஜூலை, 2012

வெட்கி தலை குனிந்தேன்



பசுமை ஆடையணிந்து காட்சியளிக்கும் வயல்வெளி,
நீண்டு நெடு நெடுவென வளர்ந்திருக்கும் தென்னை, பனை மரங்கள்,
பச்சை பசேலென்றிருக்கும் கரும்பு, வாழைத் தோட்டங்களை பார்க்கும்போது
கண்களுக்கு இனிய விருந்தும், மனதுக்கு ஒரு ரம்மியமும் கிடைக்கும்.
என்னைப் போன்ற சென்னைவாசிக்கு ஏதேனும் வெளியூர் பயணங்களின் போதுதான்
இத்தகைய அனுபவம் கிடைக்கும்.
என் பக்கத்து வீட்டில் ஓங்கி வளர்ந்த தென்னை மரம் ஒன்று இருந்தது. பெண்ணின் கூந்தலை காற்று தழுவும்போது தலைமயிர் பறக்கும் அழகை அந்த தென்னையின் கீற்றில் நான் பலமுறை கண்டிருக்கிறேன். மாலை நேரத்தில் அந்த தென்னையை தொட்ட காற்று என்னை தீண்டும்போது ஒருவித சுகத்தையும் அனுபவித்திருக்கிறேன்.
சென்னையில் இதுபோன்று வளர்ந்திருக்கும் தென்னை மரங்களில் இருந்து கிடைக்கும் பொருட்களை, வீட்டின் உரிமையாளர்கள் பறித்து அனுபவிப்பதில்லை.
அந்த மரங்களில் கூடுகட்டியிருக்கும் காக்கைகளாலோ, அந்த மரங்களில் இருந்து  ஏதேனும் பொருட்கள் அடுத்தவர் வீட்டில் விழுந்தாலோதான் மரம் குறித்த சிந்தனையே வரும். அதன்பிறகு ஆட்களைக் கொண்டு வேண்டாதவற்றை கழித்து சீராக்குவர்.
கடந்த ஞாயிறன்று காலை, திடீரென நான்கு பேர் பக்கத்து வீட்டிலிருக்கும் தென்னை மரத்தை சுற்றி சுற்றி வந்து மேலும், கீழும் பார்த்தனர். தங்களுக்குள் ஏதோ பேசி கொண்டனர்.
மரத்தின் உச்சியில் இருக்கும் வேண்டாதவற்றை கழிக்க வந்திருக்கிறார்கள் என்று நினைத்தேன்.ஆனால் அவர்கள் மரத்தை கொல்ல வந்திருக்கிறார்கள் என்பது பின்னர் தெரியவந்தது. மிகவும் அதிர்ந்து போனேன்.
என்ன செய்வது என்று தெரியாமல் மனது கிடந்து தவித்தது.
என் வீட்டின் உரிமையாளரிடம் மரம் வெட்டப்படுவதை தடுக்கும்படி கூறினேன்.
அந்த மரத்தை வெட்ட சொன்னதே நான்தான் என்று அவர் சொன்னதும் மிகுந்த வருத்தம் அடைந்தேன். அந்த தென்னை மரம் வீட்டின் மீது அடிக்கடி வேகமாக மோதுவதால் சுவரில் விரிசல் ஏற்படுகிறது. பலமுறை பக்கத்து வீட்டுக்காரரிடம் சொல்லி பார்த்தும் பயனில்லை. வேறு வழியில்லாததால், எங்களையே வெட்ட சொல்லிவிட்டார்கள். அதனால் கை காசை செலவழித்து மரத்தை வெட்டுகிறேன் என்றும் அவர் தெரிவித்தார்.
வாடகை வீட்டில் குடியிருக்கும் என்னால் எதுவும் செய்ய முடியவில்லையே என்று மனதுக்குள் வேதனைப்பட்டேன்.
கொலை செய்ய வந்த கூலியாட்களை போல் தெரிந்த அந்த மரம் வெட்டிகள் மரத்தின் அடியில் கற்பூரம் கொளுத்தி கைகளை கூப்பி, வயிற்று பிழைப்புக்காக உன்னை வெட்ட வந்திருக்கிறோம். எங்களை தண்டித்து விடாதே என்று கெஞ்சுவதைபோல் பணிந்து நின்றனர்.
எங்கள் தலைவிதி இது . எத்தனை நன்மை செய்தாலும் நன்றி இல்லாதவர்கள் நீங்கள். ஆகட்டும் வந்த வேலையை பாருங்கள் என்பதுபோல் கடைசியாக ஒரு முறை தென்னை மரம் காற்றில் அசைந்து இசைவளித்தது.
கற்பூர ஜோதி அவிந்த சிலநொடிகள்தான் தாமதம் தங்களின் கைகளில் ஆயுதங்களை எடுத்து வெட்டும் பணியில் ஈடுபட்டனர். உச்சியில் ஏறி தென்னை ஓலைகளை வெட்டினர். பின்னர் பாலை, மட்டை என ஒவ்வொன்றாக வெட்டி தள்ளினர்.
வெட்டப்படும் அந்த மரத்தில் கூடு கட்டிய ஒரு காகம், தான் கஷ்டப்பட்டு கட்டிய கூட்டை காணாமல் தவித்த தவிப்பு இருக்கிறதே, அதை வார்த்தைகளால் சொல்ல முடியாது. கா... கா... என்று கரைந்தபடியே சுற்றி சுற்றி வந்தது.  தாவி தாவி மேலும், கீழும் ஓடிய விளையாடிய அணில் ஒன்று அருகில் இருந்த மற்றொரு மரத்தில் அமர்ந்து கொண்டு தன் பங்குக்கு கத்திக் கொண்டிருந்தது.
சரியாக இரண்டு மணி நேரத்தில் மரம் முழுவதும் வெட்டப்பட்டு விட்டது.
தன் உயிர்போன நிலையிலும் வெட்டி வீழ்த்தும்படி இசைவளித்த வீட்டுக்காரருக்கு, அந்த மரம் தனது உறுப்புகளை  தானமாக தந்தது. மரத்தின் பாகங்களை பலர் பங்கு போட்டனர்.
மரத்தை வெட்டி வீழ்த்தியவர்களுக்கும்  ஒருநாள் வாழ்வதற்கான கூலியை அந்த மரம் பெற்று தந்தது. அவர்களும் சந்தோஷமாக சென்றனர். ஐந்தடி அளவில் மரம் துண்டு போடப்பட்டது. ஏறக்குறைய ஏழு துண்டுகள் தெருவின் ஓரத்தில் கிடத்தப்பட்டன.

தெருவில் நான் போகும்போதும், வரும்போதும் அந்த மரத்துண்டுகள் என்னை பார்த்து, நீ வசிக்கும் தெருவில் ஒரு கொலை நடக்கப்போவது தெரிந்தால் சும்மா இருந்திருப்பாயா? நல்ல இதயமுள்ள மனிதனாக நீ இருந்திருந்தால் அதை தடுத்து நிறுத்துவாய் அல்லவா? நான் என்ன தப்பு செய்தேன்? நான்கு பேர் சேர்ந்து என்னை கொன்றதை நீயும் பார்த்துக் கொண்டு இருந்தாயே என்று கேட்பதைப்போல் இருக்கிறது.
வெட்கி தலை குனிந்தபடியே சென்று வருகிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.