வாங்க.. வாங்க.. வணக்கம். தங்கள் வரவு நல்வரவாகுக. வந்ததும் வந்தீங்க, ஏதாவது சொல்லிட்டு போங்க !

28 மே, 2012

நம்பிதான் வாழறோம்..


   அண்மையில் ஆபீஸ் விஷயமாக திருவண்ணாமலைக்கு பயணம் செய்தேன். 


செஞ்சி பக்கம் போகும்போது அந்த பகுதியில் உள்ள மலைகளை பாருங்கள். வித்தியாசமாக இருக்கும். ஒன்றன் மேல் ஒன்றாக கற்கள் அடுக்கி வைத்திருப்பதை போல் இருக்கும் என்று ஆசிரியர் திரு.யாணன் அவர்கள் கூறியிருந்தது நினைவுக்கு வந்தது. உண்மையில் அந்த மலைகளின் அழகை ரசிக்கவே முடிந்தது. 


செஞ்சிக்கும், கீழ்பென்னாத்தூருக்கும் இடைப்பட்ட பகுதியில் குரங்குகளின் நடமாட்டத்தையும் காணமுடிந்தது. ரோட்டின் ஓரங்களில் அவை அமர்ந்து கொண்டு அவ்வழியே போகும் வண்டிகளை ஒருவித ஏக்கத்தோடு  பார்ப்பதும் அழகாகவே தெரிந்தது.ஏன் இந்த குரங்குகள் வண்டிகளையே பார்த்துக் கொண்டிருக்கின்றன என்ற நெருடல் எனக்குள். அதற்கான விடையும் பயணத்தின்போதே கிடைத்தது.


சுங்கச்சாவடி, ரயில்வே கேட் போன்ற இடங்களில் பஸ் நின்று செல்ல நேரிடுகிறது. அப்போது வெள்ளரிக்காய், வேக வைத்த வேர்க்கடலை, நுங்கு போன்றவற்றை எடுத்து கொண்டு வண்டிக்குள் ஏறி வியாபாரம் செய்வார்கள். பயணிகளும் வாங்குவார்கள். இந்த விற்பனையின் மூலம் பலர் தங்களின் வயிற்றை கழுவி கொள்கின்றனர் என்பதையும் புரிந்து கொண்டேன். 


வண்டி புறப்படும் போது டிரைவருக்கும், கண்டக்டருக்கும் இரண்டு பொட்டலங்கள் இலவசமாக வழங்கப்படும். பல கண்டக்டர் இந்த வியாபாரிகளை வண்டிக்குள் ஏற அனுமதிப்பதே இல்லை. 


அன்று நான் பயணம் செய்த பஸ்சில் இரண்டு வேர்க்கடலை பொட்டலங்களை வியாபாரி ஒருவர் கொடுத்தார். பயணி ஒருவர் வாங்கி அதை டிரைவருக்கு முன்பு வைத்தார். அந்த வேர்க்கடலையை டிரைவரோ, கண்டக்டரோ சாப்பிடவில்லை. மாறாக செஞ்சியை தாண்டும் போது ரோட்டின் ஒரத்தில் ஏக்கமாக பார்த்து கொண்டு உட்கார்ந்திருந்த குரங்கு கும்பலை நோக்கி அந்த பொட்டலங்களை டிரைவர் வீசினார். 
சிதறிய வேர்க்கடலையை குரங்குகள் எடுத்து கொண்டு அருகில் இருந்த மரங்களில் ஏறின. அங்கிருந்து அவைகள் பார்த்த பார்வையில் ஒரு நன்றி உணர்வு தெரிந்தது.


இப்படி வந்து செல்லும் வண்டிகளில் இருந்து வீசப்படும் உணவு பொருட்களை சாப்பிட்டு குரங்கு கும்பல் உயிர்வாழ்கின்றன.


இனி அவ்வழியே பயணிக்கும் போது ஏதாவது ஒரு உணவு பொருளை வாங்கி செல்ல வேண்டும் என்பது என் முடிவு. நான் சாப்பிட அல்ல, அந்த குரங்குகளுக்குத்தான். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.