வாங்க.. வாங்க.. வணக்கம். தங்கள் வரவு நல்வரவாகுக. வந்ததும் வந்தீங்க, ஏதாவது சொல்லிட்டு போங்க !

31 மே, 2012

விரக்தியும், வேதனையும்...




அண்மையில் பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டது.
வரலாறு காணாத அளவிற்கு ரூ.7.50 உயர்த்தப்பட்டதாக வாகனங்கள் வைத்திருக்கும் அனைவரும் கொந்தளிக்கின்றனர்.
நாடெங்கும் கண்டன குரல்கள் ஓங்கி ஒளிக்கின்றன.
அரசியல் கட்சிகளும் தங்கள் பங்குக்கு வரிசையாக ஆர்பாட்டங்கள் நடத்தின.
தேசிய அளவில் ஒரு சில கட்சிகள் இன்று (31.05.2012) பந்த் நடத்துவதாக அறிவித்திருந்தன.
பந்த் என்றாலே பஸ், ஆட்டோ ஓடுமோ என்று அச்சம் மக்களுக்கு உருவாகி விடும்.
இன்று காலை திருவல்லிக்கேணியில் உள்ள மருத்துவமனை ஒன்றிற்கு செல்ல வேண்டிய சூழல் உருவானது.
ஒரு ஆட்டோவில் சென்றோம். போகும்போது ஆட்டோ டிரைவரிடம் பந்த் குறித்து விசாரித்தேன்.
காலை 6 மணியிலிருந்து மாலை 6 மணி வரை பந்தாச்சே, வண்டி ஓட்றியப்பா, வழியில் எங்கேயாவது இறக்கி விட்ற போறப்பா என்றேன்.
இப்போ மணி 8 தான் சார், பத்து மணிக்கு மேல தான் ஒயின்ஷாப் திறக்கும். தண்ணி அடிச்ச பிறகுதான் பிரச்சனையே ஆரம்பிக்கும். அதுக்குள்ள போயிடலாம் என்றார்.
ஆக, இப்போ பெட்ரோல் விலை உயர்வு பிரச்சனை இல்லே, டாஸ்மாக் தண்ணிதான் என்று சிந்தித்து கொண்டே சென்றேன்.
மருத்துவமனைக்கு சென்றுவிட்டு மீண்டும் வேறொரு ஆட்டோவில் வந்தோம்.
ஏம்ப்பா பிரச்சனை எதுவும் இல்லையே, ஆட்டோ எல்லாம் ஓடுதா என்றேன்.
ஓடுது சார். அரசியல்வாதிகளுக்கு நடுத்தர மக்களை பற்றி கவலையெல்லாம் இல்லே.
இன்னைக்கு ஆட்டோ ஓட்டாமா போனா வண்டிக்கு எப்படி சார் வாடகை கட்றது?
அதுக்குமேல என் குடும்பம் பட்டினியா கெடக்கும்.
பெட்ரோல் விலை ஏறி போனதால் யாராவது வண்டி ஓட்டாம இருக்கிறாங்களா?
பங்க்ல பெட்ரோலே கிடைக்கல, அதிக விலை கொடுத்துதானே வாங்க முடிந்தது.
என்ன ஆர்பாட்டம் நடத்தினாலும் விலை குறைய போறதில்லை. என்ன செய்யறது,
எது வந்தாலும் சந்திச்சுதானே ஆகணும் என்று அவர் கூறும்போது விரக்தியும், வேதனையும் தெரிந்தது.
எந்த சூழ்நிலையையும் சந்திக்க மக்கள் தயாராகி விட்டனர்.
இந்த ஒன்றே அரசியவாதிகளுக்கு சாதகமாகி போய் விட்டது.

28 மே, 2012

நம்பிதான் வாழறோம்..


   அண்மையில் ஆபீஸ் விஷயமாக திருவண்ணாமலைக்கு பயணம் செய்தேன். 


செஞ்சி பக்கம் போகும்போது அந்த பகுதியில் உள்ள மலைகளை பாருங்கள். வித்தியாசமாக இருக்கும். ஒன்றன் மேல் ஒன்றாக கற்கள் அடுக்கி வைத்திருப்பதை போல் இருக்கும் என்று ஆசிரியர் திரு.யாணன் அவர்கள் கூறியிருந்தது நினைவுக்கு வந்தது. உண்மையில் அந்த மலைகளின் அழகை ரசிக்கவே முடிந்தது. 


செஞ்சிக்கும், கீழ்பென்னாத்தூருக்கும் இடைப்பட்ட பகுதியில் குரங்குகளின் நடமாட்டத்தையும் காணமுடிந்தது. ரோட்டின் ஓரங்களில் அவை அமர்ந்து கொண்டு அவ்வழியே போகும் வண்டிகளை ஒருவித ஏக்கத்தோடு  பார்ப்பதும் அழகாகவே தெரிந்தது.ஏன் இந்த குரங்குகள் வண்டிகளையே பார்த்துக் கொண்டிருக்கின்றன என்ற நெருடல் எனக்குள். அதற்கான விடையும் பயணத்தின்போதே கிடைத்தது.


சுங்கச்சாவடி, ரயில்வே கேட் போன்ற இடங்களில் பஸ் நின்று செல்ல நேரிடுகிறது. அப்போது வெள்ளரிக்காய், வேக வைத்த வேர்க்கடலை, நுங்கு போன்றவற்றை எடுத்து கொண்டு வண்டிக்குள் ஏறி வியாபாரம் செய்வார்கள். பயணிகளும் வாங்குவார்கள். இந்த விற்பனையின் மூலம் பலர் தங்களின் வயிற்றை கழுவி கொள்கின்றனர் என்பதையும் புரிந்து கொண்டேன். 


வண்டி புறப்படும் போது டிரைவருக்கும், கண்டக்டருக்கும் இரண்டு பொட்டலங்கள் இலவசமாக வழங்கப்படும். பல கண்டக்டர் இந்த வியாபாரிகளை வண்டிக்குள் ஏற அனுமதிப்பதே இல்லை. 


அன்று நான் பயணம் செய்த பஸ்சில் இரண்டு வேர்க்கடலை பொட்டலங்களை வியாபாரி ஒருவர் கொடுத்தார். பயணி ஒருவர் வாங்கி அதை டிரைவருக்கு முன்பு வைத்தார். அந்த வேர்க்கடலையை டிரைவரோ, கண்டக்டரோ சாப்பிடவில்லை. மாறாக செஞ்சியை தாண்டும் போது ரோட்டின் ஒரத்தில் ஏக்கமாக பார்த்து கொண்டு உட்கார்ந்திருந்த குரங்கு கும்பலை நோக்கி அந்த பொட்டலங்களை டிரைவர் வீசினார். 
சிதறிய வேர்க்கடலையை குரங்குகள் எடுத்து கொண்டு அருகில் இருந்த மரங்களில் ஏறின. அங்கிருந்து அவைகள் பார்த்த பார்வையில் ஒரு நன்றி உணர்வு தெரிந்தது.


இப்படி வந்து செல்லும் வண்டிகளில் இருந்து வீசப்படும் உணவு பொருட்களை சாப்பிட்டு குரங்கு கும்பல் உயிர்வாழ்கின்றன.


இனி அவ்வழியே பயணிக்கும் போது ஏதாவது ஒரு உணவு பொருளை வாங்கி செல்ல வேண்டும் என்பது என் முடிவு. நான் சாப்பிட அல்ல, அந்த குரங்குகளுக்குத்தான். 

22 மே, 2012

கற்பை பறி கொடுத்து...




.... ஆகிய நான் என்னுடைய கற்புடைமைக்கு திருமணத்துக்கு முன்பும், பின்பும் உண்மையாக இருப்பேன். கடவுளுக்கும், எனது நேர்மையான மனசாட்சிக்கும் உண்மயாக இருப்பேன் என்றும், எனது உடல் இறைவனின் கோவில். இந்த உலகில் தவறிப்போக நிறைய வாய்ப்பு உண்டு. எனவே நான் கற்பு ஒழுக்கத்தில் சிறந்து விளங்க உறுதி கொள்கிறேன்.
இது கற்பு உறுதிமொழி வாசகம்
அண்மையில் பெங்களூரில் நடந்த வாழ்வுக்கான முன்னுரிமை மாநாட்டில் இந்த கற்பு உறுதிமொழி வாசகத்தை கூறி இளம்பெண்களும், இளைஞர்களும் சபதம் ஏற்றுக் கொண்டனர்.
இப்படி ஒரு உறுதிமொழியை இளம்பெண்களும், இளைஞர்களும் ஏற்றது பாராட்டுக்குரிய விஷயமாகும்.
இன்றைய காலகட்டத்தில் இளைய சமுதாயம் தூய்மையாக கற்போடு வாழ்வது என்பது முடியாத காரியமாகும் என்பது என் கருத்து.
அவர்கள் திரும்புகிற பக்கமெல்லாம் பாவத்திற்கு அழைத்துச் செல்லும் பாதைகள்தான் உள்ளன.
விரும்பியும், விரும்பாமலும் அறிவியல் முன்னேற்றத்தின் காரணமாக நம்மை கேட்காமலேயே அத்தனை அசுத்தங்களும் நம் வீட்டிற்குள்ளேயும், நாம் பயன்படுத்துகின்ற தகவல் தொடர்பு சாதனங்கள் வழியேயும் நுழைந்து விட்டன.
முன்பெல்லாம் இலைமறை காயாகதான் பல்வேறு விஷயங்கள் (குறிப்பாக செக்ஸ்) அறியப்பட்டன. ஆனால் இப்போதோ அனைத்தும் வெளிப்படையாக தெரிகின்றன.
தொலைக்காட்சியும், திரைப்படங்களும் இளைய சமுதாயத்தை அழிவுப் பாதைக்கு அழைத்துச் செல்லும் அற்புத பணியை செய்து கொண்டிருக்கின்றன என்பது யாரும் மறுக்க முடியாத ஒன்றாகும்.
காதல் காட்சிகள் என்ற பெயரில் நான்கு சுவருக்குள் நடக்கின்ற அத்தனை விஷயங்களையும் காட்டி விடுகின்றனர். வெளிப்படையாக ஆண்- பெண்
உடலுறவை காட்டாதாது மட்டும்தான் அவர்கள் மிச்சம் வைத்திருக்கிறார்கள். கால போக்கில் அதுவும் காட்டப்பட்டாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை.

அதிர்ச்சி தகவல்

தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் கடந்த ஆறு ஆண்டுகளில் நடந்த மருத்துவ பரிசோதனையில் 320 மாணவிகள் கர்ப்பமாக இருப்பதாக அதிர்ச்சிகரமான உண்மை தெரிய வந்துள்ளது. அதைவிட அபாயகரமான அறிக்கை ஒன்றை தேசிய குற்ற ஆவணக்காப்பகம் வெளியிட்டுள்ளது. இந்திய அளவில் கடந்த ஆண்டில் மட்டும் 7,379 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதாகவும், சுமார் 40 ஆயிரம் மாணவர்கள் மன உளைச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்கிறது அந்த அறிக்கை.
2011-ஆம் ஆண்டு இணையதள பயன்பாடு குறித்து நடைபெற்ற ஆய்வு ஒன்றில் உலக அளவில் இந்தியாவும், மாநில அளவில் தமிழ்நாடும் முதலிடத்தில் உள்ளதாக தெரிய வந்துள்ளது. அதேசமயம் மாணவர்கள் அதிக அளவில் இணையதளத்தில் தேடிய வார்த்தை செக்ஸ் என்பது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நெல்லை- தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள செல்போன் கடைகளில் மாணவர்களின் செல்போன்களில் ஆபாசப் படங்கள் பதிவு செய்து கொடுக்கப்படுவதால் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி வருகிறது. இதை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
(நன்றி: மே மாத திருக்குர் ஆன் நற்செய்தி மலர், பக்கம்-4...)

மாணவப் பருவத்திலேயே நன்னடத்தை, ஒழுக்கம் போன்ற விஷயத்தில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது.
பின்னர் படிப்பு முடிந்து வேலைக்குச் சென்று கை நிறைய சம்பாதிக்கும் போது அவர்கள் நிலை தடுமாறி முறையற்ற வாழ்க்கை வாழ்கின்றனர். பெற்றோர் உட்பட யாருடைய பேச்சையும் கேட்டு நடக்க மறுக்கின்றனர். காதல் என்கின்ற பெயரில் போலியான ஒரு உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருக்கின்றனர். சாட்டிங்கில் தொடங்கி டேட்டிங் வரைக்கும் சகஜமாக செல்கின்றனர்.
ஒரு பெண் ஒரு ஆணாடோ, ஒரு ஆண் ஒரு பெண்ணோடா காதலித்த காலம் மாறி இரு பிரிவினரும் பலரை காதலிப்பதும், திருமணம் செய்யாமலேயே சேர்ந்து வாழ்வதும், பிடிக்காமல் போனால் பிரிந்து போவதும் என முறை தவறிய வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். மானக்கேடாக வாழ்ந்து பாதிக்கப்பட்டதும் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை முடிவுக்கு சென்று வாழ்வை முடித்துக் கொள்கின்றனர்.
இதுபோன்ற தவறான வாழ்க்கையில் ஈடுபட்டவர்களை மீட்டு புதிய அர்த்தமுள்ள, மதிப்புமிக்க, போற்றதலுக்குரிய வாழ்க்கையை தொடங்குவதற்காக பெங்களூரில் நடைபெற்ற புதுமையான விழிப்புணர்வு நிகழ்ச்சியில்தான் கற்புநெறி உறுதிமொழியை இளைய சமுதாயம் ஏற்றது.



அன்னுன்சியதா என்ற 78 வயது சகோதரி (கன்னியாஸ்திரி) கடந்த 25 ஆண்டுகளாக வாழ்வுக்கான முன்னுரிமை இயக்கம் என்ற அமைப்பின் மூலம் கற்புநெறி, ஒழுக்கம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார் என்ற செய்தி மனதிற்கு ஆறுதல் அளிக்கிறது. (நன்றி- தினத்தந்தி, 18.05.2012)
பல்வேறு பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று செக்ஸ் கல்வி, செக்ஸ் பயன்கள் மற்றும் விலை மதிப்பற்ற வாழ்க்கை வாழ்வது குறித்து மாணவ- மாணவிகளிடம் விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகிறார்.
அவர் பத்திகைக்கு அளித்த பேட்டியில், இந்தியாவில் சமீப காலமாக செக்ஸ் விஷயத்தில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. இந்தியாவில் நடத்தப்பட்ட செக்ஸ் தொடர்பான ஆய்வில் 5,365 பேரிடம் கருத்து கேட்கப்பட்டது. அதில் 4-ல் ஒரு பகுதி பேர் இளம் பருவத்தில் தங்களது கற்பை பறி கொடுத்து தூய்மையை இழந்த அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியானது. திருமணத்திற்கு முன்பு 50 சதவீதம் ஆண்களும், 20 சதவீதம் பெண்களும் வேறொருவரிடம் செக்ஸ் வைத்திருந்தது தெரியவந்தது. மேலும் நாள் ஒன்றுக்கு இந்தியாவில் 60 ஆயிரம் இளம்பெண்கள் கருச்சிதைவு செய்வதாக பதிவாகி உள்ளது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது தவறு இல்லை என்ற மனோபாவம் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அதுவே இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த தூண்டுகோலாக இருந்தது என்று தெரிவித்துள்ளார்.

கடவுள் நம்மை புனிதமானவர்களாக படைத்து இருக்கிறார். கடவுளுக்காக நாமும் புனிதம் உள்ளவர்களாக இருந்து நம்மை அர்ப்பணிப்போம் என்றும் அந்த பேட்டியில் சகோதரி அன்னுன்சியதா தெரிவித்திருக்கிறார்.
இளைய சமுதாயத்தின்பால் அக்கறை கொண்டு இளைஞர்கள், இளம்பெண்களுக்கு நல்லொழுக்க வாழ்க்கை குறித்த பயிற்சி அளித்து வாக்குறுதி எடுக்க செய்து, சாதி, மத, இனவேறுபாடு இன்றி தேசிய அளவில் சகோதரி முன்னெடுத்து செல்லும் இந்த பணி மகத்தானது. மிகப்பெரிய அவரின் இந்த புனித பணிக்கு தலை வணங்குகிறேன்.

நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா? ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக் கெடுத்தால், அவனை தேவன் கெடுப்பார். தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது. நீங்களே அந்த ஆலயம். (1 கொரிந்தியர் 3:16-17)


நம் உடல் கடவுளின் ஆலயம். அது தேவன் தங்கியிருக்கும் ஸ்தலம் என்பதை உணர்ந்து பரிசுத்த வாழ்வு வாழ்வோம். பரிசுத்தமில்லாமல் இருந்தால் பரிசுத்தப்படுத்தி கொள்வோம்.

17 மே, 2012

அடடா ரொம்ப முக்கியம்

கூரை இல்லை, கழிப்பறை வசதி இல்லை, விளையாட்டு திடலும் கிடையாது தமிழகத்தில் பல பள்ளிகளில். அதை கண்காணித்து நடவடிக்கை எடுக்காத அரசு, (குளிர்ந்த பீர் கிடைக்காமல் குடிமகன்கள் அவதிப்படுகிறார்களாம்) விரைவில் தமிழகத்தில் செயல்படும் 2,500 டாஸ்மாக் கடைகளுக்கு ரெப்ரேஜிரேட்டர் வழங்கவிருக்கிறதாம். இன்றைய நாளேடுகளில் செய்தி வெளியாகியிருக்கிறது. 
ரொம்ப முக்கியம்.