வாங்க.. வாங்க.. வணக்கம். தங்கள் வரவு நல்வரவாகுக. வந்ததும் வந்தீங்க, ஏதாவது சொல்லிட்டு போங்க !

8 நவ., 2011

யார் பிக் பாஸ்?



உடல், ஆன்மா, மனம் ஆகியவைகளின் மொத்த கலவைதான் உயிருள்ள மனிதன். இவற்றில் ஏதாவது ஒன்று தனக்கு தேவையில்லை என்று எந்த மனிதனாலும் சொல்ல முடியாது. அப்படி சொல்வானானால் அவன் மனிதனாக இருக்க முடியாது. பிறக்கும்போதே இவை நம்முடன் வருபவை. இதில் யாருக்கும் எந்த மாற்றுக் கருத்தும் இருக்காது என்று நினைக்கிறேன்.

சரி அதற்கென்ன இப்போ என்கிறீர்களா?

இந்த மூன்றில் யார் பிக் பாஸ் என்ற எண்ணம் எனக்குள் தோன்றியதால் சிந்தனை குதிரையைத் தட்டி விட்டேன்.

இதைப் பற்றி எழுதுவதற்கு முன் இவை குறித்த எனது தேடல் நீண்டது. வளைத்தளம், வளைப்பூக்கள் என தேடி பார்த்தேன். இருப்பினும் எனக்கு திருப்தி ஏற்படவில்லை. எனக்குள் தேட முயன்றபோது கிடைத்ததை பதிவு செய்கிறேன்.

ஒன்றை விட்டு இன்னொன்று இயங்க முடியாது என்பது இந்த மூன்றுக்கும் தெரியும். அப்படியிருக்கையில் தேவையா இப்படியொரு விபரீத போட்டி. என்கிறீர்களா?

போட்டி என்று வந்து விட்ட பிறகு இனிமேல் என்ன செய்வது?

ஆன்மா, மனம் ஆகியவற்றால் இயக்கப்படுவதால் மனித உடல் சற்று பலவீனமானவனாக எனக்கு தெரிகிறது.

மற்ற இரண்டும் சற்று பலம் பொருந்தியதாகவும், ஒன்றையொன்று மிஞ்சும் வகையில் இருக்கின்றன.

இரண்டும் மனிதனுக்குள் இருந்து செயல்பட்டு கொண்டிருப்பவை. இவற்றில் முழு முதற்காரணமாக விளங்குவது மனம். இதைப் பற்றிக் கூற வேண்டுமானால், மிகவும் வேகமாக செயல்படக் கூடியது. குப்பைகளை கொட்டுவதைப் போல நொடிக்கொரு தரம் எண்ணங்களை பிரசவித்து கொண்டிருக்கும்.

அந்த எண்ணக் குப்பைகளில் சில நேரம் மாணிக்கங்கள் கிடைப்பதுண்டு. அவ்வாறு கிடைக்கும் மாணிக்கங்களால் மனிதன் சுடர்விட்டு ஒளிர்வதும் உண்டு.

மனிதனின் ஒவ்வொரு செயலும் இதன் கட்டுப்பாட்டில்தான் இருக்கும்.

இதன் எல்லா எண்ணங்களும் ஒன்றுபோல் இருப்பதில்லை.சீரழிக்கவும், சீர்படுத்தவும் செய்யும் எண்ணங்களை உருவாக்கும் அதிசய கருவி இது.

மகிழ்ச்சியான தருணங்களில் துள்ளி குதிக்கும். காதல், காமம், பாலியல் உறவுகள் போன்ற விஷயங்களின்போது குத்தாட்டமும் போடும். ஏதேனும் நடக்கக்கூடாதது நடந்து விட்டாலோ நோயில் விழுந்து பாயில் படுத்தவனைப் போல கிடக்கும்.

இதனால் உருவாகும் உணர்ச்சிகளுக்கு வடிக்காலாக இருப்பவன்தான் மனிதன். இன்னும் சொல்லப் போனால் இது கண்ணுக்குத் தெரியாத மாயாவி.

மனிதனின் செயலுக்கு இது பிண்ணனி என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், இதை யாரும் குறை கூறுவதில்லை.

வில்லில் இருந்து புறப்பட்டு வந்து அம்பு தாக்கும்போது, தாக்குண்டவர் அம்பின் மீதுதான் கோபம் கொள்கிறாரே தவிர, அது புறப்பட்டு வந்த வில்லின் மீது கோபப்படுவதில்லை. அதுபோலதான் இது தப்பித்துக் கொள்ளும்.

மனிதனை ஆட்டிப்படைக்கும் ஆற்றல் பெற்ற இதை ஒரு பிக்பாஸ் என்றே கருதலாம்.

இதேவேளையில் இதை எதிர்த்துப் போட்டியிடும் ஆன்மாவின் பலமும் என்ன என்பதை தெரிந்து கொண்டால் இறுதி முடிவு எடுத்து விடலாம்.

ஆகாய விமானத்தில் ரகசிய பெட்டி ஒன்று வைக்கப்பட்டிருக்குமாம். அதனை பிளாக் பாக்ஸ் என்று கூறுவார்களாம். வானத்தில் செல்லும் ஆகாய விமானம் ஏதேனும் விபத்துக்குள்ளாக நேரிட்டால், விபத்து நடந்த இடத்தில் முதலில் தேடப்படுவது இந்த கருப்புப் பெட்டியைத்தானாம். ஏனென்றால், விமானம் எப்படி விபத்துக்குள்ளானது என்ற தகவல் அதில் துல்லியமாக பதிவாகி இருக்குமாம். அதை வைத்து காரணத்தைக் கண்டுபிடித்து விடுவார்களாம்.

ஒருவகையில் இதுவும் அந்த பிளாக் பாக்ஸை போலத்தான் செயல்படுகிறது.

மனிதனின் ஒவ்வொரு செயலுக்கும் எப்படி மனம் காரணமாகிறதோ, அந்த செயலின் மூலம் ஏற்படும் சாதக, பாதக நிகழ்வுகளை பதிவு செய்து நேரம் கிடைக்கும்போது, அதை மனிதனுக்கு ரீவைண்ட் செய்து காண்பிப்பதில் இது முக்கிய பங்காற்றுகிறது.

மனிதன் பிறக்கும்போதே மனதைபோல் இதுவும் அவனுக்குள் இயங்க தொடங்கி விடுகிறது.

மனதில் தோன்றும் எண்ணம் நல்லனவாக இருந்தால் முதலில் பாராட்டி அதை நிறைவேற்றுவதற்கு உதவுவது இதுதான்.

அதே வேளையில் தீய எண்ணம் உருவாகுமானால் முதலில் எச்சரிக்கை மணி அடித்து, அதனால் உண்டாகும் ஆபத்தை உணர்த்துவதும் இதுதான்.

இது நல்ல எண்ணங்கள் உருவாகும்போது மகிழ்ந்து மனதுடன் கை குலுக்கிக் கொள்ளும். இதன் பாராட்டு மழையில் நனையும் மனமும் உடனே மனிதன்மூலம் அதனை வெளிப்படுத்தி அவனுக்கு நற்பெயரை பெற்றுத் தருகிறது.

தவறான எண்ணமாக இருந்தால் மனதுடன் கடுமையான விவாதம் செய்யும். சிலநேரங்களில் இருவருக்கும் இடையே மிகப்பெரிய போராட்டமே நடக்கும். இவர்களின் போராட்டத்தால் மனிதனும் மிகுந்த சஞ்சலத்திற்கு ஆளாகிறான். அந்நேரத்தில் இதன் பேச்சை மனம் கேட்க மறுப்பதோடு அந்த எண்ணத்தை நிறைவேற்றுவதில் தீவிர முயற்சி எடுத்து மனிதனை அதில் சிக்க வைத்து விடுகிறது. இதுவோ வாயடைத்து அமைதியாகி விடுகிறது.

கடவுளுக்கும் இதற்கும் நேரடி தொடர்பு உள்ளது என்ற நம்பிக்கை ஆன்மிக சிந்தனை உள்ளவர்களுக்கு இருக்கிறது. அதேபோல் பாவம், சொர்க்கம், நரகம் என்ற சிந்தனை உள்ளவர்கள் பெரும்பாலும் இதனை துணையாக அழைத்துக் கொண்டு இறைவனை நாடுவர்.

இது எனக்குள் இருக்கிறது என்ற உணர்வு இல்லாத நிலையில் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

வேகத்தின் செயல்பாடு மனம், இதன் செயல்பாடோ அமைதிப் புரட்சி.

எண்ணங்களை பிரசவிப்பது, அதை நிறைவேற்றுவது என செயல்படும் மனம், அடுத்ததொரு புதிய எண்ணம் உருவானவுடன் பழைய எண்ணத்தையோ, அதனால் அடைந்த லாப, நஷ்டத்தையோ கணக்கில் எடுத்துக் கொள்ளாது.

ஆனால், இதுவோ மனதின் ஒவ்வொரு எண்ணத்தையும், அதனால் நிகழும் விளைவுகளையும் தனக்குள் பதிய வைத்துக் கொள்ளும்.

மனிதன் துன்பத்திற்குள்ளாகும்போது மனம் கை கழுவி விடும். இதுவோ, மனிதனின் இந்த நிலைக்கு நீதான் காரணம். நான் அப்போதே கூறினேன் கேட்கவில்லை என்று கூறி தான் பிடித்து வைத்திருக்கும் படத்தை ரீவைண்ட் செய்து காண்பித்து தவறு எங்கே நிகழ்ந்திருக்கிறது என்று உணர்த்தும்.

பூமியை விட்டு பிரியும்போது மனமும், அது இயக்கிய மனித உடலும் அழிந்து விடுகின்றன. ஆனால் இதற்கு அழிவு என்பதே இல்லை. இது இன்னொரு உயிருக்குள் வைக்கப்பட்டு மீண்டும் பிறக்கும் என்கின்றனர் அடுத்த பிறவியை நம்புபவர்கள்.

எல்லா மதங்களும் இதற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன.

மரணத்திற்கு பின் இன்னொரு உலகம் உண்டு. மனிதனின் ஆன்மா கடவுளின் நியாயத்தீர்ப்புக்காக கடவுளின் முன்பு நிறுத்தப்படும். அப்போது அந்த ஆன்மாவின் பதிவுப்படி தீர்ப்பு கிடைக்கும். அதன்பிறகு சொர்க்கமோ, நரகமோ கிடைக்கும் என்ற நம்பிக்கையும் நம்மில் பலரிடம் உள்ளது.

ஆக, இத்தகைய செயல்பாடுகளின் மூலம் மனதை விட இது அதிக பலம் பொருந்தியதாகவே காணப்படுகிறது.

மனிதன், மனம், ஆன்மா ஆகிய இந்த மூன்றுக்கும் இடையே உருவான போட்டியில் இப்பிறவியை கடந்தும் உயிரோடு இருக்கும் ஆன்மாதான் பிக் பாஸ் என்ற முடிவை நான் எடுத்து விட்டேன்.

வாழ்க்கையில் பல்வேறு கட்டங்களைக் கடந்து லாப, நஷ்டங்களை நான் கணக்கிட்டபோது எனக்குள் இருந்த ஆன்மாவை கண்டுகொண்டேன்.

என் வாழ்க்கையின் காலகட்டத்தில், நான் நடந்து வந்தபாதையில் பதிவு செய்து வைத்திருந்த எனது செயல்பாடுகளும், அவற்றின் மூலம் நான் எத்தகையவன் என்பதை உணர்த்தியதே என் ஆன்மாதான்.

இதன் மூலம் என் மனம் பிரசவிக்கும் எண்ணங்கள் நல்லவையா? தீயவையா என்பதை இப்போது என்னால் உணர்ந்துக் கொள்ள முடியும்.

நான் எப்படி செயல்பட வேண்டும் என்ற ஆலோசனையை ஆன்மாவிடம் இருந்து என் மனம் பெற்றுத் தருகிறது. அதன்படி என் ஓட்டத்தை ஓடிக் கொண்டிருக்கிறேன்.

கண் மூடி திறப்பதற்குள் காலம் மிக வேகமாக கடந்து கொண்டிருக்கிறது. இனி இந்த உலகில் வாழும் நாட்களில் எனக்கான ட்ராக்கில் ஒழுங்காக ஓடி என் ஓட்டத்தை முடிக்கவே முயற்சிக்கிறேன்.

என் முடிவை தெரிவித்து விட்டேன்.

இனி இந்த போட்டியில் வெற்றி பெற்றவர் யார் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.