வாங்க.. வாங்க.. வணக்கம். தங்கள் வரவு நல்வரவாகுக. வந்ததும் வந்தீங்க, ஏதாவது சொல்லிட்டு போங்க !

11 ஜூலை, 2011

தேசமே மகிழ்ந்து களிக்கூறு


ஒவ்வொரு நாட்டுக்கும் அந்த நாட்டின் தேசிய கீதம் மதிப்பு மிக்க ஒன்றாகும். அரசு நிகழ்ச்சிகள், பள்ளி விழாக்கள், விளையாட்டுப் போட்டிகள் இன்னும் பிற நிகழ்ச்சிகளின் முடிவில் தேசிய கீதம் இசைக்கப்படும். அப்போது எத்தனை பெரிய மனிதனாக இருந்தாலும் அதற்கு மரியாதை கொடுக்கும் வகையில் எழுந்து நிற்பார்கள். இது எல்லா நாட்டிற்கும் பொருந்தும்.

நமது இந்திய திருநாட்டிலும் இது காலம் காலமாக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஒரு நேரத்தில் திரையரங்குகளில் படத்தின் முடிவில் ஒலிபரப்பப்படும். திரையில் தேசியக் கொடி பட்டொளி வீசி பறக்கும். சிலர் மரியாதை கொடுத்தனர். பலரோ திரையரங்கை விட்டு வெளியேறினர். நாளடைவில் தேசிய கீதம் ஒலிபரப்பப்படுவது நிறுத்தப்பட்டது. இது எல்லோருக்கும் தெரிந்ததுதானே, இது ஒரு செய்தியா என நீங்கள் கேட்பது எனக்குப் புரிகிறது.

சரி விஷயத்திற்கு வருவோம்.

நான் திரையரங்குக்குச் சென்று படம் பார்த்து நீண்ட நாட்களாகி விட்டிருந்தது. மகன் வற்புறுத்தலின் பேரில் வடபழனியில் உள்ள பேர் பெற்ற நிறுவனம் நடத்தும் திரையரங்கில் படம் பார்க்கச் சென்றோம். நுழைவுச்சீட்டு கொடுத்துவிட்டு உள்ளே சென்றோம். திரையில் விளம்பரக்காட்சி ஒளிபரப்பாகி கொண்டிருந்து. திடீரென திரையில் ஒரு அறிவிப்பு.

தேசிய கீதம் ஒலிபரப்ப போகிறோம். தயவு செய்து எழுந்து நிற்கவும் என்றது அந்த அறிவிப்பு. சிறிது நேரத்தில் ஒலிபரப்பும் செய்யப்பட்டது. திரையில் தேசியக்கொடி கம்பீரமாக வீசி பறந்தது. எங்கும் ஒரே நிசப்தம். ரசிகர்கள் எல்லோரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர். பின்னர் திரைப்படம் ஒளிபரப்பானது. இந்நிகழ்வு என் மனதை வெகுவாக கவர்ந்தது.

அந்த திரையரங்கம் எது தெரியுமா?

ஏவி.எம்.ராஜேஸ்வரி திரையரங்குதான்.

அவர்களின் இந்த நல்ல செயலை என்னால் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

இதை எல்லோரும் பின்பற்றினால் எப்படி இருக்கும்?

தேசமே மகிழ்ந்து களிக்கூறு!